ஒரு ஜென் துறவி மரணப்படுக்கையில் இருந்தார். அவரைப் பார்க்க சாங்சு என்ற இன்னொரு குரு வந்திருந்தார்
''இப்பிறவியைக் கடப்பதற்கு உங்களுக்கு என் உதவி தேவையா?'' என்று சாங்சு கேட்டார்.
''இது தானாக வருகிறது... தானாகப் போகிறது. உங்களால் இதில் என்ன உதவி செய்ய முடியும்?'' என்று கேட்டார், மரணத்தை நெருங்கிக்கொண்டு இருந்த துறவி.
''அதுதான் உங்கள் பிரச்னையா? வருவது, போவது என்று எதுவும் இல்லை என்பதை உணர்வதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது'' என்றார் சாங்சு.
அந்தத் துறவிக்கு உடனே விளங்கியது. புன்னகையுடன் உயிர் நீத்தார்.
விளக்கம்:
ஆம், வருவது போவது என்று பேசுவதே மாபெரும் வேடிக்கைப் பேச்சு. உண்மையில் வருவது போவது என்பதே இல்லை. எல்லாம் ஒருவிதப் பிரமைதான்.
சுழற் காற்றில் சிக்கி இருக்கிறீர்களா? அது இயக்கத்தில் இருக்கும்போது, மரம், வாகனம், வீடு என்று எல்லாவற்றையும் சுழற்றி எடுத்துக்கொண்டு அலையும். அத்தனை உண்மையாகத் தோற்றம் அளிக்கும். இயக்கம் முடிந்ததும், சட்டெனக் கலைந்து, இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிடும். அதே போல், கடலில் மாபெரும் அலை எழும்புகிறது. அடுத்த நிமிடம் அந்த அலையைக் காணவில்லை. அது எங்கே போனது?
புயலும், சுழற்காற்றும், அலையும் போல எல்லாமே இந்தப் பிரபஞ்சத்தில் நேரும் வெறும் நிகழ்வுகள்தாம்.
இப்பூவுலகில், சக்தி வெவ்வேறு வடிவங்களில் மையம்கொள்வதும், கலைந்து கரைந்துவிடுவதும்தான் நிகழ்கிறதே தவிர, எதுவும் எங்கே இருந்தும் வரவில்லை. எங்கேயும் போகப் போவதும் இல்லை.
வந்ததாக நினைத்துவிட்டால், இதன் மீதும், போவதாக நினைத்துவிட்டால், அதன் மீதும் பற்று ஏற்பட்டுவிடும். நீங்கள் போவதற்கு எந்த இடமும் இல்லை என்பதை உணர்ந்து இங்கே முழுமையாக இருங்கள். முழுமையாக இங்கேயே கரைந்துபோங்கள்!
புதன், 6 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக